Friday, December 3, 2010

5. அருளும் அருமையும்!

பாடியவர்: நரிவெரூஉத் தலையார் (5, 195). இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும், இவர் நரிவெரூஉத்தலை என்னும் ஊரினர் என்ற காரணத்தால் இவருக்கு இப்பெயர் வந்ததென்றும், இவர் இயற்றிய பாடல் ஒன்றில் “நரிவெரூஉத்தலை” என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும் இவர் பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இவர் இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் இரண்டு (5, 195). இவர் பாடல்கள் கருத்துச் செறிவு உடையவை.

பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் (5). இச்சேர மன்னன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். இவன் இயற் பெயர் ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் நாட்டு எல்லை கொங்கு நாட்டில் இருந்த கருவூர் வரை இருந்தது. இவன் கருவூரில் முடிசூட்டிக் கொண்டு அங்கிருந்து ஆட்சி புரிந்தான். இவன் அழகிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைக் கண்டவர் உடல் நலம் பெறுவர் என்ற கருந்து அவன் காலத்து நிலவியது.
பாடலின் பின்னணி: இப்பாடலில், சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, தன் நாட்டு மக்களைக் குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும் என்று நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
5 அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. இடை = இடம். 2. பரத்தல் = பரவுதல். 4. ஓர் = ஒப்பற்ற. 6. நிரயம் = நரகம். 7. ஓம்பு = காப்பாற்றுவாயாக; மதி - அசைச் சொல். 8. அளிது = செய்யத் தக்கது.

உரை: எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன். அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.

No comments:

Post a Comment