Showing posts with label புறநானூறு - பாடல் 48. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 48. Show all posts

Tuesday, March 1, 2011

48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !

பாடியவர்: பொய்கையார் (48, 49). இவர் இப்பாடலில், “கள்நாறும்மே கானலம் தொண்டி; அஃது எம் ஊரே” என்று கூறியிருப்பதிலிருந்து இவருடைய ஊர் தொண்டி என்பது தெரிய வருகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18 - ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன் (48, 49). இவன் சேர வேந்தருள் ஒருவன். கோதை மார்பன் என்பது இவன் இயற்பெயர் என்றும், இவன் தொண்டி என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு தன் நாட்டை ஆட்சி செய்தான் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவன் நாடு குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளைக் கொண்டிருந்ததாகப் புலவர் பொய்கையார், புறநானூற்றுப் பாடல் 49-இல் கூறுகிறார்.

கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னன் சேரன் செங்குட்டுவனின் மகன் என்றும் இவன் குட்டுவன் கோதை, கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்பகட்டியானை நெடுந்தேர்க் குட்டுவன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் முதலிய பெயர்களாலும் அழைக்கப் பட்டதாகவும் பேராசிரியர் முனைவர் கோ. தங்கவேலு தம் நூலில் குறிப்பிடுகிறார். சேரன் செங்குட்டுவனுக்குக் குட்டுவன் சேரல் என்று ஒருமகன் இருந்ததாகவும், அவனைப் புலவர் பரணர் என்பவருக்கு சேரன் செங்குட்டுவன் பரிசாக அளித்ததாகவும் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் பதிகத்தில் காண்கிறோம். சேரன் கோக்கோதை மார்பன் என்பவனும், சேரன் செங்குட்டுவனின் மகனாகிய குட்டுவன் சேரல் என்பவனும் ஒருவனா என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணி: சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: புலவர் ஆற்றுப்படை. புலவன் ஒருவன் இரவலனாக வந்த மற்றொரு புலவனை நோக்கித் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் தன் தலைமை தோன்றக் கூறி அவ்விரவலனை அத்தலைவனிடத்தே செலுத்துதல்.

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
5 அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.கோதை = சேரன், பூமாலை. 3. மா = கரிய; கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை). 4. கள் = மலர்த்தேன்; கானல் = கடற்கரைச் சோலை. 6. படர்தல் = செல்லுதல். 7. முதுவாய் = முதிய வாய்மையுடைய. 8. அமர் = போர்; மேம்படுதல் = உயர்தல். 9. மேம்படுநனை = மேம்படுத்துபவனை.

கொண்டு கூட்டு: இரவல, நீயும் அன்னோர் படர்குவை ஆயின், நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனக் கூட்டுக.

உரை: சேரன் கோக்கோதை மார்பில் அணிந்த மாலையாலும், அந்தக் கோதையைக் கூடிய மகளிர் அணிந்த மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன். முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடை ய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

சிறப்புக் குறிப்பு: தலவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.