Showing posts with label புறநானூறு - பாடல் 52. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 52. Show all posts

Friday, March 4, 2011

52. ஊன் விரும்பிய புலி !

பாடியவர்: மருதன் இளநாகனார் (52, 55, 138, 139, 349). இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் நான்கு (77, 160, 279, 367) செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 51-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, தன் நாட்டை விரிவு படுத்த விரும்பிப் போருக்கு எழுவதை அறிந்த புலவர் மருதன் இளநாகனார், இப்பாடலில், அவன் போருக்குச் செல்வதை, புலி ஊன் விரும்பித் தன் குகையிலிருந்து வெளியே செல்வதற்கு ஒப்பிடுகிறார். மற்றும் அவனை எதிர்ப்பவர்களின் நாடு வளமிழந்து காடாகி அழியும் என்று அவன் போர்செய்யும் ஆற்றலை இப்பாடலில் புகழ்ந்து பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு
5 வடபுல மன்னர் வாட அடல்குறித்து
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
10 வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
15 வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே.

அருஞ்சொற்பொருள்:
1.அணங்கு = தெய்வத்தன்மை (அச்சம்); அளை = குகை; முனைஇ = வெறுத்து. 2. முணங்குதல் = சோம்பல் முறித்தல்; ஒருத்தல் = ஆண் புலி (விலங்கேற்றின் பொது). 3. துரப்புதல் = தேடுதல். 5. அடல் = கொல்லுதல். 7. கண்ணுதல் = கருதல். 8. அளியர் = இரங்கத் தக்கவர். 10. உழை = இடம், பக்கம்; மருது = மருத மரம்; வாங்கு = வளைந்த; சினை = கிளை; வலக்கும் = சூழும். 11. யாணர் = புது வருவாய்; ஒரீஇ = நீங்கி, விலகி; இனி = இப்போது, இனிமேல். 12. கலி = ஆரவாரம் (முழவு ஒலித்தல்); கந்தம் = தூண். 13. பொதியில் = அம்பலம் (மன்றம், சபை). 14. நாய் = சூதாடு கருவி. 15. வல் = சூதாடுங் காய்; வல்லின் நல்லகம் = சூதாடும் இடம். 16. வாரணம் = காட்டுக் கோழி. 17. விளிதல் = அழிதல்.

கொண்டு கூட்டு: வழுதி, அடல் குறித்து நீ கண்ணியது இதுவாயின் விளியும் நாடுடையோர் தாம் யார்கொல் அளியர் எனக் கூட்டுக.

உரை: அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி, கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும். அத்தகைய நீர் வளமும், நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.

சிறப்புக் குறிப்பு: வழிபாடு நடைபெறும் இடங்களிலுள்ள தூண்களில் கடவுள் தங்கி இருப்பதாக நம்பிக்கை நிலவியது. உதாரணமாக, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” என்று அகநானூற்றுப் பாடல் 307-இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.