Showing posts with label புறநானூறு - பாடல் 12. Show all posts
Showing posts with label புறநானூறு - பாடல் 12. Show all posts

Wednesday, December 8, 2010

12. அறம் இதுதானோ?

பாடியவர்: நெட்டிமையார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 9-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தன் பகைவர்க்குக் கொடியவனாக இருந்து, அவர்களின் நாட்டை வென்று, அவர்களின் பொருள்களைக் கொண்டுவந்து தன்னிடம் அன்போடு இரக்கும் இரவலர்க்கு யானையும் தேரும் அளிக்கும் இனியவனாக இருக்கிறான் என்று கூறி, அவனுடைய இச்செயல் எவ்வாறு அறமாகும் என்ற ஒருவினாவையும் நெட்டிமையார் முன்வைக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி?
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
5 இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. மலைதல் = அணிதல். 2. பூ = பட்டம். புனை = அலங்காரம்; பண்ணல் = செய்தல், அலங்கரித்தல். 3. விறல் = வெற்றி; மாண் = மாட்சி. 4. இன்னா = துயருண்டாகுமாறு. 5. ஆர்வலர் = பரிசிலர்; முகம் = இடம்.

கொண்டு கூட்டு: குடுமி! பிறர் மண் கொண்டு, மலையவும் பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை; இது நினக்கு அறமோ எனக் கூட்டுக.

உரை: வெற்றியில் சிறந்த குடுமி! பகைவர்களுக்குக் கொடியவனாக இருந்து, அவர் நாட்டை வென்று, உன்னை விரும்புபர்களுக்கு இன்முகத்தோடு இனியன செய்கிறாயே! பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை மலர்களையும் புலவர்களுக்குப் பட்டம் சூட்டிய யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் வழங்குகிறாயே! இது அறமாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், நெட்டிமையார் பாண்டியனைப் பழிப்பதுபோல் புகழ்கிறார்.